கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்! (2)
Friday, 27. November 2009, 20:45:14
ஸ்தோத்திரங்களை சமஸ்கிருதத்தில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா? இல்லை, இல்லை, இல்லை என்று ஆணித்தரமாக நமது மகான்கள் கூறி உள்ளனர். மறைத்து வைக்கப்பட்டுள்ள வேத ரகசியங்களை நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர். இதைக் கேட்டவாறே தமிழ் பிரபந்தங்களுக்குப் பின்னே திருமால் உற்சவ மூர்த்தியாகச் செல்ல வேதியரால் ஓதப்படும் வேதம் அவனைத் தேடிப் பின்னே வருகிறது!
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பதிகங்களைப் பாடி அருளிய போதே அதன் பலன்களைத் தெளிவாகப் பதிக இறுதியிலேயே சொல்லி விடுகின்றனர். ஒரு பெரிய அதிகாரத் தோரணையுடன் "அரசாள்வர், ஆணை நமதே!" என்று ஞானசம்பந்தர் சொல்லும்போது, நமக்கு பக்தியுடன் கூடிய வியப்பு மேலிடுகிறது. அருணகிரிநாதரோ முருகனின் சுட்டித்தனமான இயல்பை வெட்டவெளிச்சமாகத் தன் திருப்புகழில் கூறி விடுகிறார். "எண்டிசை திகழும் புகழ் கொண்டவன், வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" (சருவும்படி எனத் தொடங்கும் திருப்புகழில்).
நவக்கிரக தோஷங்களைப் போக்க வல்லது ஞானசம்பந்தர் அருளிய 'வேயுறு தோளிபங்கன்' பதிகம். அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் 'நாள் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்' என்று பாடி முருக பக்தியில் நம்மைத் திடம் கொள்ளச் செய்கிறார். தசரதன் செய்த சனி ஸ்தோத்திரமோ சிறியதாக இருந்தாலும் சனீஸ்வரனைப் ப்ரீதி செய்து ஏராளமான நலன்களை வாரி வழங்கும் அதிக பலனைத் தருவதில் பெரிய ஸ்தோத்திரமாக விளங்குகிறது. இன்னும் வியாசர் அருளிய நவக்ரஹ ஸ்தோத்திரம், பீஷ்ம ஸ்தோத்திரம், துருவ ஸ்தோத்திரம், ப்ரஹ்லாத ஸ்தோத்திரம், கணேச ஸ்தோத்திரம் என இந்தப் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக நீள்கிறது.
சிவபிரானை நம் கடனாளியாக்க ஒரு வழி
பிறவாதிருக்க வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாதிருக்க வேண்டும் என்ற மனப்பாங்கை வளர்க்க அனுதினமும் அவரவர்க்கு விருப்பமான ஸ்தோத்திரங்களைச் சொல்வதே வெற்றிக்கு வித்திடும் அடிப்படையான வழியாகும்.
இறுதியாக ஒரு விஷயம்! அற்புதமான பூவுலகத்தில் மனித வாழ்க்கையைக் கொடுத்த சிவனையே நாம் கடனாளியாக்க முடியுமாம்! அதுவும் நீண்ட ஸ்தோத்திரங்களைக் கூடச் சொல்ல வேண்டாமாம். வழி என்ன பார்ப்போமா? விருத்தாசல புராணத்தில் வரும் செய்யுள் இது:-
"திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவசிவ என்றிடில் பனை மேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்
ஒருத்தன் வாயார சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும், இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்"
சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்! இதே போல ராம என்ற இரண்டெழுத்தின் அற்புத மகிமையைக் கம்பன் கூறக் கேட்போம்:-
"நன்மையும் செல்வமும் நாளு நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்"
துதிகளைச் செய்வோம்! துயரில்லா வாழ்வு பெறுவோம்!
ராம ராம ராம! சிவ சிவ சிவ!!

















