Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Food"

சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா?

, , ,

பல ஆண்டுகளாகச் சத்துணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் இதய சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். இதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று புகழ்ந்து பாடி வருகிறார்கள்.

இந்தப் புகழ்பாடலில் இதே உணவுத்திட்டம் புற்றுநோய் கோளாறுகளையும் குணமாக்குகிறது என்பதையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், நீண்ட நாள் வாழ வேண்டுமா? அப்படியானல் இயற்கை வழியையே பின்பற்றுங்கள். உணவு முறைகளின் மூலம் ஆயுளை ஆரோக்கியத்துடன் நீடித்து வாழுங்கள் என்கின்றனர்.

1994 இல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டீ எட்டினி மாரடைப்பு வந்து மீண்ட 605 ஆண்-பெண்களைத் தேர்வு செய்தது. இவர்களில் பாதிப்பேர்களை அமெரிக்க இதயக் கழக சிபாரிசு செய்த உணவுத் திட்டப்படி இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியன சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். இது முழுநலம் தரும் உணவுத் திட்டம்தான்.

மீதிப்பேர்களை இயற்கை உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.

அதாவது இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், சபோலா ஆயில் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆடு, மாடு, கோழி முதலிய இறைச்சி வகைகள் இவர்களுக்குக் கிடையாது.

நான்கு ஆண்டுகள் கழித்து (1998இல்) இவர்களைப் பரிசோதித்தார்கள்.

இயற்கை உணவுத் திட்டக்காரர்களிடம் 7 பேர்களே புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள். ஆனால், அமெரிக்க இதயக்கழக உணவுத் திட்டக்காரர்களில் 12 பேர் புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள்.

முதல் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆராய்ந்த முடிவுப்படி இவர்களுக்கு இயற்கை உணவை நன்கு சாப்பிடச் சொல்ல புற்றுநோய் குறைந்தது.

இதய நோயைத் தடுக்கும் இயற்கை உணவில் புற்றுநோயைத் தடுக்கும் அம்சம் எது என்பதையும் நுணுகி ஆராய்ந்தார்கள். மத்திய தரைக்கடல் நாடுகளில் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களே இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதற்குக் காரணம் இயற்கை உணவில் உள்ள நார்ச்சத்து, நச்சுமுறிவு மருந்து, மரபணுக்கள் உடைவது (டி.என்.ஏ. உடைவது), முதுமைத் தோற்றம் உண்டாவது போன்ற எல்லா பிரச்னைகளையும் தடுக்கும் சி வைட்டமின், முதலியவையே காரணம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

இதயநோய், புற்றுநோய் உட்பட எந்த நோயும் இன்றி வாழ சரியான நேர்வழியான இயற்கை உணவுத் திட்டத்தையே பின்பற்றுவது நலம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

இயற்கை உணவில் என்ன இருக்கிறது?

தக்காளியில் உள்ள வைகோப்பன், பழத்தோல்களில் உள்ள ப்ளோவினாய்ட்ஸ், எலுமிச்சை யில் உள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெதியோனின் என்ற அமிலம், மீனில் உள்ள டைரோசின் அமிலம் மற்றும் துத்தநாக உப்பு முதலியவையே இத்தகைய உணவில் அதிகம் இருப்பதால் நோயின்றி நீண்ட நாள் வாழ்க்கையைத் தருகிறது. எல்லா நோய்களையும் இவை தடுத்து கட்டுப்பாட்டில் வைப்பதால் வாழ்நாள் நீடிக்கிறது.

( Thanks to : http://tamilvanan.com/content/healthy-life )

(Source:- http://tamizh2000.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88)

அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்

, ,

துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களில் பெரும்பாலானோருக்கும் ஏற்படுவது சகஜமாகவே இருக்கிறது.

இத்தகைய கோளாறு உள்ளவர்கள், எளிய முறையிலான வீட்டு வைத்திய முறையைக் கையாண்டாலே, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயனடைலாம்.

ஓர் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் பிழிந்துவிட வேண்டும். இதை, உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இப்படித் தவறாமல் செய்தால், அஜீரணக் கொளாறு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

ஏற்கெனவே அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் கழித்து மேற்குறிப்பிட்ட கலவையை அருந்தினாலும் பலனளிக்கும்.

நல்லா தூங்கணுமா ? சில வழிமுறைகள்................

, , , ...

சரியான தூக்கமின்மை இன்று பெரும்பாலானவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிக்கல். சிலர் படுத்த உடனே தூங்கிப் போகிறார்கள், சிலர் அரை மணி நேரம் புரண்டு படுத்தால் தான் தூங்குகிறார்கள், சிலர் தூங்கினாலும் அவ்வப்போது விழித்துக் கொள்கிறார்கள், சிலர் விடியற்காலையில் விழித்தெழுந்து பின் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

எப்படியாவது தூக்கம் வரவேண்டும் என்று மக்கள் கடவுளர்களையும், மாத்திரைகளையும் நாடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

தொலைந்து போகும் தூக்கம் பல்வேறு விதமான நோய்களையும் மனிதனுக்குத் தந்து செல்கிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் விளக்கியிருக்கின்றன.

உடலையும், மனதையும், வாழ்க்கையையும் சோர்வடையைச் செய்யும் இந்த தூக்கமின்மையை எப்படி சரி செய்வதற்கு பல்வேறு உளவியலார்கள், மருத்துவர்கள் பல வழிகளைச் சொல்லியிருக்கின்றனர்.

1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். எப்பாடு பட்டாவது அந்த நேரத்தில் தினமும் தூங்க முயலுங்கள். உடலும், மனமும் அந்த நேரத்திற்குப் பழகி விடும்.

தூங்கச் செல்லும் போது அன்றைய தினத்தின் சோகங்களையும், தோல்விகளையும், துயரங்களையும் தலையணையாய் கட்டி படுக்கையில் போடாதீர்கள். எதுவாய் இருந்தாலும் விடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விடுங்கள்.

இரவில் அதிக நேரம் விழித்திருந்தால், அதை ஈடுகட்ட விடியலில் சற்று நேரம் அதிகமாய் தூங்கினால் போதும் என்று நினைப்பது தவறு. இரவில் தொலையும் தூக்கத்தை பகலில் மீண்டெடுக்க முடியாது.

ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் தான் நமக்குத் தேவையானது. அதை விட அதிகம் தூங்குவது உடலை சோர்வடையச் செய்யுமே தவிர உற்சாகமூட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

2. தூங்குவதற்குரிய நல்ல சுகாதாரமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதிக குளிர், அதிக வெப்பம் தாக்காத இடம் தூக்கத்துக்கு மிகச் சிறந்தது.

சன்னலை சற்றே திறந்து வைத்துக் கொண்டு தூங்குவது நல்ல காற்றோட்டத்துக்கும், ஆழமான சுவாசத்துக்கும் உத்தரவாதம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சுற்றுப் புற சத்தம் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது எனில் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு தூங்கலாம்.

இலகுவான ஆடை அணியுங்கள். படுக்கையறையில் இருக்கும் ஏதேனும் பொருள் உங்கள் தூக்கத்தைச் சிதைக்கிறதெனில் அதை மாற்றுங்கள்.

படுக்கை உங்கள் தூக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். பெரிய படுக்கையும், சரியான தலையணையும், போர்வையும் இருப்பது அவசியம்.

உங்களுக்கு வசதியான முறையில் தூங்க முயலவேண்டும். ஒருக்களித்துப் படுப்பதோ, கவிழ்ந்து படுப்பதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

3. படுக்கையறையின் வண்ணமும், வெளிச்சமும் தூக்கத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணிகள். படுக்கை அறை அடர் நிறத்தில் இல்லாமல் இலகுவான நீலம் போன்ற நிறங்களில் அமைந்திருப்பது தூக்கத்தை வருவிக்கும் என்கின்றனர் உளவியலார்.

4. பகல் பொழுதில் நீங்கள் செய்யும் வேலைக்கும், இரவு நேர தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பகலில் உடலை வருத்தி உழைப்பவர்கள் இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயல்பு.

பகலில் உடலுழைப்பு தேவைப்படாத பணிகளைச் செய்பவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்குத் தேவையான உயிர்வழியும், நுரையீரலுக்கு பலமும், இரவில் நிம்மதியான உறக்கத்தையும் உடற்பயிற்சி தவறாமல் தரும்.

தூக்கத்துக்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். காலை, அல்லது மாலையில் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.

5. தூங்கச் செல்லும் போது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். தியானம் செய்யும் பழக்கமுடையவர்களுக்கு தூக்கம் ஒரு சிக்கலாய் இருப்பதே இல்லை. காரணம் அவர்களுடைய உடல் தியானத்தினால் இலகுவாகிறது.

தியானத்தில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மனதை இலகுவாக வைத்திருக்க ஒரு கற்பனைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்கின்றனர் உளவியலார். அதாவது மனதை அதற்கு விருப்பமான ஆனந்தமான, உடல் இறுக்கம் தளர்க்கும் கற்பனைச் சூழலுக்கு கொண்டு சென்று உடலை இலகுவாக்குதல். உடல் இலகுவாக இருப்பது தூக்கம் எளிதில் பற்றிக்கொள்ள உதவும்.

6. தூங்கச் செல்லும் முன் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை நன்றாக உள்ளிழுத்து அது உடலெங்கும் செல்வதாக கற்பனை செய்து கொண்டே நான்கு வரை மெதுவாக எண்ணுங்கள். பின் மெதுவாக எட்டு வரை எண்ணிக் கொண்டே சுவாசத்தை வெளிவிடுங்கள். இதே போல பத்து முறை செய்யுங்கள்.

யோகாசனம் செய்யும் விருப்பமுடையவர்கள் யோகாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூச்சுப் பயிற்சியைச் செய்யலாம்.

தரையில் படுத்துக் கொண்டு கால்களையும், கைகளையும் உடலோடு ஒட்டாமல் வைத்துக் கொண்டு உடலின் ஒவ்வோர் உறுப்பாக ஓய்வு பெறட்டும் என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே வாருங்கள். மிக அற்புதமான ஓய்வை உணர்வீர்கள்.

மாலையில் நல்ல வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுவதும் இரவில் நல்ல தூக்கத்துக்கு பெருமளவில் உதவும்.

7. நல்ல இசை கேட்பது மனதை இலகுவாக்கும். நல்ல இசை எது என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடும். குழந்தையாய் இருக்கும்போது தாலாட்டு கேட்டு தூங்கிப் பழகிய மனம், நல்ல இசையில் தாயின் தாலாட்டு சுகத்தை திரும்பப் பெறுகிறது. மனம் நிம்மதியான தூக்கத்துக்குத் தயாராகிறது.

தூக்கத்துக்கெனவே நிறைய தியான வகை இசை இப்போதெல்லாம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

8. படுக்கைக்குச் செல்லும் முன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் இரவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

இரவில் தொலைக்காட்சி பார்ப்பது தவிர்க்க முடியாது என நீங்கள் நினைத்தால், மனதை இலகுவாக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

அதிக நேரம் தொடர்கள் பார்த்து அதையே உள்வாங்கிக் கொண்டிருந்தால், அல்லது மனதை பாதிப்படையச் செய்யும் ஏதேனும் திரைப்படங்கள் பார்த்தால், உங்கள் தூக்கம் பாதிப்படையும்.

அதேபோல, தூங்கச் செல்லும் முன் காஃப்பைன் பொருட்கள், சாக்லேட், குளிர்பானம், புகை, மது இவற்றை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர், பால் ஏதேனும் அருந்தலாம்.

9. பகல் நேரத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பது கூட இரவு நேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக கொழுப்பு, இனிப்பு போன்றவற்றை பகல் நேரத்தில் உண்பது இரவு நேர தூக்கத்தைப் பாதிக்கும். பகல் நேரத்தில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல தூக்கத்துக்கு துணை செய்யும்.

இரவு நேரத்தில் அதிக காரமான உணவுகளையோ, மிதமிஞ்சிய அளவுக்கு உணவுகளையோ உண்பதை தவிர்க்க வேண்டும்.

தினமும் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீராவது சராசரியாகக் குடிக்க வேண்டும். உடலுழைப்பை அதிகம் செலுத்தி பணி செய்பவர்கள் அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் தூங்கச் செல்வதற்கு சுமார் ஒருமணி நேரத்திற்குள் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

10. மூளையின் மையத்திலிருக்கும் ஒரு சிறு பாகத்திலிருந்து சுரக்கும் மெலடோனின் எனும் ஹார்மோனுக்கும் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மெலடோனின் தேவையான அளவுக்கு சுரக்கும் போது எளிதில் தூக்கம் கிடைக்கிறது. வயதாக வயதாக இந்த சுரப்பி குறைவாக சுரக்கிறது. அதுவே முதியவர்களுக்கு தூக்கம் தொடர்பான சிக்கல்கள் உருவாக காரணமாகிறது. மெலடோன் சரியான விகிதத்தில் சுரக்க மேற்கூறிய வழிகள் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

தூக்கம் வந்தால், துக்கம் விடை பெற்றுப் போய்விடும். நல்ல தூக்கத்துக்குத் தேவை மாத்திரைகளல்ல நம்முடைய வாழ்க்கை முறையில் செயல்படுத்த வேண்டிய சில மாற்றங்கள் மட்டுமே என்பதைப் புரிந்து செயல்படுவோம்

உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)

, , , ...

நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது.




இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. தானிய உணவுகள்
2. காய்கறி உணவுகள்
3. பழ உணவுகள்
4. பால் உணவுகள்
5. இறைச்சி உணவுகள்
6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்

இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம்.

குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.

அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.

மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது

இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

பரிமாறும் அளவுகள் (Servings)

ஒரு நபர் உண்ணும் உணவின் அளவினைக் குறிப்பிட பரிமாறும் அளவுகள் என்ற அளவு முறையைக் கடைபிடிக்கின்றோம். இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவு முறை கிடையாது. ஒரு உத்தேச அளவே. ஒரு பரிமாறும் அளவு என்பது நாம் உண்ணும் உணவைப் பொறுத்து எடையில், அளவில் மாறுபடும்.

ஒருவருக்கு எத்தனை பரிமாறும் அளவுகள்(servings) உணவுத் தேவை என்பது அவருக்கு எவ்வளவு சக்திகள்(calories) தேவை என்பதனைப் பொறுத்தது. ஒருவருக்கு எவ்வளவு சக்திகள் தேவை என்பது அவருடைய வயது, பால், உடல், எடை மற்றும் அவர் செய்யும் வேலைகள் போன்ற அம்சங்களைப் பொறுத்தது. தாங்களுக்கு தேவையான சக்திகளின் அளவினை அறிந்து அதற்கு ஏற்றார்போல் உணவு முறையையும் பரிமாறும் அளவுகளின் எண்ணிக்கையையும் அமைத்துக் கொள்ளவும்.

சில முக்கிய உணவுகளின் பரிமாறும் அளவுகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

தானிய உணவு வகைகள் (ஒரு பரிமாறும் அளவு)

ஒரு துண்டு ப்ரெட்
அரை கோப்பை சமைத்த அரிசி
இரண்டு ரொட்டிதுண்டுகள்
ஒரு அவுன்ஸ் கேக் வகை உணவுகள்
கால் கோப்பை சமைத்த தானியங்கள்

காய்கறி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)

ஒரு கோப்பை கீரைகள்
அரை கோப்பை பச்சைக் காய்கறிகள்
முக்கால் கோப்பை காய்கறிச் சாறு

பழ உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)

நடுத்தர அளவுள்ள ஒரு பழம் (ஆப்பிள், வாழை...)
அரை கோப்பை நறுக்கிய பழத்துண்டுகள்
முக்கால் கோப்பை பழச்சாறு
பால் உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)

ஒரு கோப்பை பால்
ஒரு அவுன்ஸ் பாலாடைக்கட்டி
அரைக் கோப்பை தயிர்
இறைச்சி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)

90 கிராம் சமைத்த இறைச்சி
ஒரு முட்டை
100 கிராம் மீன் உணவு

இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)

ஒரு தேக்கரண்டி வெண்ணெய், நெய் போன்றவை
ஒரு மேசைக்கரண்டி கிரீம்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஜாம்
ஒரு அவுன்ஸ் சாக்லேட்


ரவா தோசை !

, , , ...

தேவையான பொருள்கள்:

ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்


செய்முறை:

ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் - மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.
* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி. :smile:] தொடர்ந்து சரியாக வரும்.

* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.

* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…

(http://mykitchenpitch.wordpress.com/2008/02/18/ravaa-dosai/)

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31