கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!
Friday, 27. November 2009, 20:42:31
மனித வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளே இல்லாத ஒருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்! இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, சமாளித்து அவைகளைத் தூள்தூளாக்கிக் காற்றோடு பறக்கவிடுவதற்கான வழிகளை மகரிஷிகளும், தேவர்களும், ஞானிகளும் காட்டியுள்ளனர். யாகம் செய்தல் போன்ற கடினமான, அனைவராலும் எளிதில் செய்யமுடியாத வழிகள் போன்றவை ஒருபுறம் இருக்க, அனைவரும் எளிதில் பின்பற்றிச் சொல்லக்கூடிய ஏராளமான ஸ்தோத்திரங்களை அவர்கள் அருளிச் செய்துள்ளனர்.
ரிக்வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மஹாபாரதம், பதினெட்டுப் புராணங்கள் ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களில் விருப்பத்திற்கு உகந்தவற்றை ஓதினால் தீராத பிரச்சினைகளே இல்லை! இது தவிர ஆங்காங்கு பாரத தேசம் முழுவதும் அவ்வப்பொழுது அவதரித்துள்ள மகான்கள் இயற்றிய துதிகளும் அவர்களே கூறிய பலன்களைத் தப்பாது தரும்.
ஸ்தோத்திரம் என்றால் என்ன?
ஸ்துதி என்பது இறைவனின் குணபாவங்களை வியந்து, புகழ்ந்து பாடிப் பரவுவதாகும். சந்தமும் சொற்களும் துள்ளிக் குதித்து விளையாட ஸ்தோத்திரங்களின் பொருள் நம்மை உருக்கி உன்னத நிலைக்கு ஏற்றும். 'ஸ்து' என்ற தாதுவிலிருந்து தோன்றிய ஸ்தவம் மற்றும் ஸ்தோத்திரம் ஆகிய இரண்டிற்கும் சிறிய வேறுபாடு உள்ளது. ஸ்தோத்திரம் என்பது பலனைக் குறித்துச் செய்யப்பட்டு, அந்தப் பலனைப் பூர்வமாக முன்பு அடைந்தவர்களைப் போல அதைத் துதிப்பவர்களும் அடைய உதவுவதாகும். ஸ்தவம் என்பது பாவத்தைப் பிரதானமாகக் கொண்டதாகும். அது யாரைத் துதிப்பதற்காகச் செய்யப்பட்டதோ அந்தத் துதியையே பிரதானமாகக் கொண்டது.
ஸ்தோத்திரம் தரும் பலன்கள்
இப்படிப்பட்ட ஸ்தோத்திரம் அல்லது ஸ்தவம் (விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், குமார ஸ்தவம் போன்ற எண்ணற்றவை) ஆகியவற்றின் மகிமை எல்லையற்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டது! பல பிரம்மாண்டமான விபத்துக்களிலிருந்தும் உயிர் காக்கும் வல்லமை பெற்றவை இவை! கஜேந்திரன் செய்த ஸ்துதியால் ஆதிமூலமே நேரில் தோன்றி கஜேந்திரனைக் காத்த கதையை நாடு அறியும். அதே போல உத்தரை காப்பாற்றப்பட்ட சம்பவமும் திரௌபதி செய்த ஸ்தோத்திரத்தால் அவள் மானம் காப்பாற்றப்பட்ட கதையும் பக்தர்கள் மனம் கவர்ந்தவை.
பீஷ்மரால் துதிக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம், அகஸ்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களிலிருந்து அவரவர் மனோபாவத்திற்குத் தக்கபடியும், அவரவரது பிரச்சினைக்கு ஏற்றபடியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடியும் உகந்தவற்றை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். குந்தியின் மனோபாவம் சற்று விசித்திரமானது! குந்தி செய்த குந்தி ஸ்தோத்திரம், அவரைக் கஷ்டங்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றி வந்த கிருஷ்ணனைக் கஷ்டமே வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டவில்லை. மாறாகத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் வேண்டினார்! இந்த விபத்துக்கள் ஒவ்வொரு அடியிலும் அவருக்கு ஏற்பட வேண்டுமாம்! ஏன் இப்படி ஒரு விசித்திர ஆசை அவருக்கு? அப்படி விபத்து வந்தால் கிருஷ்ண தரிசனம் உடனே அவருக்குக் கிடைத்து விடுமாம்! பக்தையைக் காப்பாற்றப் பரந்தாமன் ஓடி வந்துதானே ஆக வேண்டும்! அதுமட்டுமின்றி அந்தத் தரிசனங்கள் அவரைப் பிறக்காமல் முக்தி அடையச் செய்து விடுமாம். கஷ்டங்களை ஒரேயடியாகத் தீர்க்க வழி கண்ட குந்தி ஸ்தோத்திரம் அவரைப் போன்றே அபூர்வமான மனநிலை உடையவர்களுக்கு உகந்த ஒன்று.
(விபத: சந்து ந: ஷச்சத்தத்ர ஜகத்குரோ)
பவதோ தர்சனம் யத்ஸ்யாத் அபுனர்பவ தர்சனம்
(ஓ, ஜகத்குரு! ஒவ்வொரு படியிலும் எப்போதும் எங்களுக்கு விபத்துக்கள் வரட்டும்! இதனால் உனது தரிசனம் கிடைக்கும். இது அடுத்த பிறவி அடையாதபடி எங்களைக் காக்கும்)
ஸ்தோத்திரத்தின் முதல் பலன் - அது மன அழுக்குகளை நீக்கி மனதைச் சுத்தமாக்கும். (விமலா மதிம்!). ஹ்ருதய சுத்தம் ஏற்படும். ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன. பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிகப் பவித்ரமானவை. துக்க நிவர்த்தி, எல்லையற்ற அமைதி, நிம்மதி, யாருக்கும் துன்பம் நினைக்காத மனம், இறைவனின் பாதாரவிந்தங்களில் ஈடுபாடு, பூஜையில் நம்பிக்கை, இகத்தில் சுகம் ஆகிய இவற்றோடு இறுதியாக மோட்சமும் தர வல்லவை ஸ்தோத்திரங்கள்!
ஸ்தோத்திரங்கள் எங்கே கிடைக்கும்? ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு, 476 ஸ்தோத்திரங்கள் அடங்கிய பழைய நூலான ஸ்தோத்திர ரத்னாஹர், கோரக்பூர்-கீதா பிரஸ் வெளியீடுகள் ஆகியவற்றில் முக்கிய ஸ்தோத்திரங்கள் உள்ளன. இவற்றால் உடனடிப் பலன் பெற முடியும்.
(Source: http://www.nilacharal.com/tamil/spiritual/slogam_329.asp)

















