Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "slogam"

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்! (2)

, ,

மொழியைக் கடந்த துதிகள்

ஸ்தோத்திரங்களை சமஸ்கிருதத்தில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா? இல்லை, இல்லை, இல்லை என்று ஆணித்தரமாக நமது மகான்கள் கூறி உள்ளனர். மறைத்து வைக்கப்பட்டுள்ள வேத ரகசியங்களை நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர். இதைக் கேட்டவாறே தமிழ் பிரபந்தங்களுக்குப் பின்னே திருமால் உற்சவ மூர்த்தியாகச் செல்ல வேதியரால் ஓதப்படும் வேதம் அவனைத் தேடிப் பின்னே வருகிறது!

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பதிகங்களைப் பாடி அருளிய போதே அதன் பலன்களைத் தெளிவாகப் பதிக இறுதியிலேயே சொல்லி விடுகின்றனர். ஒரு பெரிய அதிகாரத் தோரணையுடன் "அரசாள்வர், ஆணை நமதே!" என்று ஞானசம்பந்தர் சொல்லும்போது, நமக்கு பக்தியுடன் கூடிய வியப்பு மேலிடுகிறது. அருணகிரிநாதரோ முருகனின் சுட்டித்தனமான இயல்பை வெட்டவெளிச்சமாகத் தன் திருப்புகழில் கூறி விடுகிறார். "எண்டிசை திகழும் புகழ் கொண்டவன், வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" (சருவும்படி எனத் தொடங்கும் திருப்புகழில்).

நவக்கிரக தோஷங்களைப் போக்க வல்லது ஞானசம்பந்தர் அருளிய 'வேயுறு தோளிபங்கன்' பதிகம். அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் 'நாள் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்' என்று பாடி முருக பக்தியில் நம்மைத் திடம் கொள்ளச் செய்கிறார். தசரதன் செய்த சனி ஸ்தோத்திரமோ சிறியதாக இருந்தாலும் சனீஸ்வரனைப் ப்ரீதி செய்து ஏராளமான நலன்களை வாரி வழங்கும் அதிக பலனைத் தருவதில் பெரிய ஸ்தோத்திரமாக விளங்குகிறது. இன்னும் வியாசர் அருளிய நவக்ரஹ ஸ்தோத்திரம், பீஷ்ம ஸ்தோத்திரம், துருவ ஸ்தோத்திரம், ப்ரஹ்லாத ஸ்தோத்திரம், கணேச ஸ்தோத்திரம் என இந்தப் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக நீள்கிறது.

சிவபிரானை நம் கடனாளியாக்க ஒரு வழி

பிறவாதிருக்க வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாதிருக்க வேண்டும் என்ற மனப்பாங்கை வளர்க்க அனுதினமும் அவரவர்க்கு விருப்பமான ஸ்தோத்திரங்களைச் சொல்வதே வெற்றிக்கு வித்திடும் அடிப்படையான வழியாகும்.

இறுதியாக ஒரு விஷயம்! அற்புதமான பூவுலகத்தில் மனித வாழ்க்கையைக் கொடுத்த சிவனையே நாம் கடனாளியாக்க முடியுமாம்! அதுவும் நீண்ட ஸ்தோத்திரங்களைக் கூடச் சொல்ல வேண்டாமாம். வழி என்ன பார்ப்போமா? விருத்தாசல புராணத்தில் வரும் செய்யுள் இது:-

"திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவசிவ என்றிடில் பனை மேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்
ஒருத்தன் வாயார சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும், இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்"

சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்! இதே போல ராம என்ற இரண்டெழுத்தின் அற்புத மகிமையைக் கம்பன் கூறக் கேட்போம்:-

"நன்மையும் செல்வமும் நாளு நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்"

துதிகளைச் செய்வோம்! துயரில்லா வாழ்வு பெறுவோம்!

ராம ராம ராம! சிவ சிவ சிவ!!

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!

, ,

பிரச்சினைகளைத் தீர்க்க எளிய வழி!

மனித வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளே இல்லாத ஒருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்! இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, சமாளித்து அவைகளைத் தூள்தூளாக்கிக் காற்றோடு பறக்கவிடுவதற்கான வழிகளை மகரிஷிகளும், தேவர்களும், ஞானிகளும் காட்டியுள்ளனர். யாகம் செய்தல் போன்ற கடினமான, அனைவராலும் எளிதில் செய்யமுடியாத வழிகள் போன்றவை ஒருபுறம் இருக்க, அனைவரும் எளிதில் பின்பற்றிச் சொல்லக்கூடிய ஏராளமான ஸ்தோத்திரங்களை அவர்கள் அருளிச் செய்துள்ளனர்.

ரிக்வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மஹாபாரதம், பதினெட்டுப் புராணங்கள் ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களில் விருப்பத்திற்கு உகந்தவற்றை ஓதினால் தீராத பிரச்சினைகளே இல்லை! இது தவிர ஆங்காங்கு பாரத தேசம் முழுவதும் அவ்வப்பொழுது அவதரித்துள்ள மகான்கள் இயற்றிய துதிகளும் அவர்களே கூறிய பலன்களைத் தப்பாது தரும்.

ஸ்தோத்திரம் என்றால் என்ன?

ஸ்துதி என்பது இறைவனின் குணபாவங்களை வியந்து, புகழ்ந்து பாடிப் பரவுவதாகும். சந்தமும் சொற்களும் துள்ளிக் குதித்து விளையாட ஸ்தோத்திரங்களின் பொருள் நம்மை உருக்கி உன்னத நிலைக்கு ஏற்றும். 'ஸ்து' என்ற தாதுவிலிருந்து தோன்றிய ஸ்தவம் மற்றும் ஸ்தோத்திரம் ஆகிய இரண்டிற்கும் சிறிய வேறுபாடு உள்ளது. ஸ்தோத்திரம் என்பது பலனைக் குறித்துச் செய்யப்பட்டு, அந்தப் பலனைப் பூர்வமாக முன்பு அடைந்தவர்களைப் போல அதைத் துதிப்பவர்களும் அடைய உதவுவதாகும். ஸ்தவம் என்பது பாவத்தைப் பிரதானமாகக் கொண்டதாகும். அது யாரைத் துதிப்பதற்காகச் செய்யப்பட்டதோ அந்தத் துதியையே பிரதானமாகக் கொண்டது.

ஸ்தோத்திரம் தரும் பலன்கள்

இப்படிப்பட்ட ஸ்தோத்திரம் அல்லது ஸ்தவம் (விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், குமார ஸ்தவம் போன்ற எண்ணற்றவை) ஆகியவற்றின் மகிமை எல்லையற்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டது! பல பிரம்மாண்டமான விபத்துக்களிலிருந்தும் உயிர் காக்கும் வல்லமை பெற்றவை இவை! கஜேந்திரன் செய்த ஸ்துதியால் ஆதிமூலமே நேரில் தோன்றி கஜேந்திரனைக் காத்த கதையை நாடு அறியும். அதே போல உத்தரை காப்பாற்றப்பட்ட சம்பவமும் திரௌபதி செய்த ஸ்தோத்திரத்தால் அவள் மானம் காப்பாற்றப்பட்ட கதையும் பக்தர்கள் மனம் கவர்ந்தவை.

பீஷ்மரால் துதிக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம், அகஸ்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களிலிருந்து அவரவர் மனோபாவத்திற்குத் தக்கபடியும், அவரவரது பிரச்சினைக்கு ஏற்றபடியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடியும் உகந்தவற்றை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். குந்தியின் மனோபாவம் சற்று விசித்திரமானது! குந்தி செய்த குந்தி ஸ்தோத்திரம், அவரைக் கஷ்டங்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றி வந்த கிருஷ்ணனைக் கஷ்டமே வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டவில்லை. மாறாகத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் வேண்டினார்! இந்த விபத்துக்கள் ஒவ்வொரு அடியிலும் அவருக்கு ஏற்பட வேண்டுமாம்! ஏன் இப்படி ஒரு விசித்திர ஆசை அவருக்கு? அப்படி விபத்து வந்தால் கிருஷ்ண தரிசனம் உடனே அவருக்குக் கிடைத்து விடுமாம்! பக்தையைக் காப்பாற்றப் பரந்தாமன் ஓடி வந்துதானே ஆக வேண்டும்! அதுமட்டுமின்றி அந்தத் தரிசனங்கள் அவரைப் பிறக்காமல் முக்தி அடையச் செய்து விடுமாம். கஷ்டங்களை ஒரேயடியாகத் தீர்க்க வழி கண்ட குந்தி ஸ்தோத்திரம் அவரைப் போன்றே அபூர்வமான மனநிலை உடையவர்களுக்கு உகந்த ஒன்று.

(விபத: சந்து ந: ஷச்சத்தத்ர ஜகத்குரோ)
பவதோ தர்சனம் யத்ஸ்யாத் அபுனர்பவ தர்சனம்

(ஓ, ஜகத்குரு! ஒவ்வொரு படியிலும் எப்போதும் எங்களுக்கு விபத்துக்கள் வரட்டும்! இதனால் உனது தரிசனம் கிடைக்கும். இது அடுத்த பிறவி அடையாதபடி எங்களைக் காக்கும்)

ஸ்தோத்திரத்தின் முதல் பலன் - அது மன அழுக்குகளை நீக்கி மனதைச் சுத்தமாக்கும். (விமலா மதிம்!). ஹ்ருதய சுத்தம் ஏற்படும். ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன. பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிகப் பவித்ரமானவை. துக்க நிவர்த்தி, எல்லையற்ற அமைதி, நிம்மதி, யாருக்கும் துன்பம் நினைக்காத மனம், இறைவனின் பாதாரவிந்தங்களில் ஈடுபாடு, பூஜையில் நம்பிக்கை, இகத்தில் சுகம் ஆகிய இவற்றோடு இறுதியாக மோட்சமும் தர வல்லவை ஸ்தோத்திரங்கள்!

ஸ்தோத்திரங்கள் எங்கே கிடைக்கும்? ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு, 476 ஸ்தோத்திரங்கள் அடங்கிய பழைய நூலான ஸ்தோத்திர ரத்னாஹர், கோரக்பூர்-கீதா பிரஸ் வெளியீடுகள் ஆகியவற்றில் முக்கிய ஸ்தோத்திரங்கள் உள்ளன. இவற்றால் உடனடிப் பலன் பெற முடியும்.

(Source: http://www.nilacharal.com/tamil/spiritual/slogam_329.asp)

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

, ,

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

காயத்ரி மந்திரமும் அதன் மகிமைகளும்

சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.
எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.


(Source: http://aanmigakkadal.blogspot.com/2009/01/blog-post_27.html)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31